Published : 20 Oct 2023 06:43 PM
Last Updated : 20 Oct 2023 06:43 PM

கரூர் மணல் குவாரிகளில் 3-வது முறையாக அமலாக்கத்துறை சோதனை

மணல் குவாரிகளில் 3-வது முறையாக அமலாக்கத்துறை சோதனை

கரூர்: கரூர் மாவட்ட மணல் குவாரிகளில் 3-வது முறையாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதில் ட்ரோன் கேமரா, டிஜிட்டல் சர்வே கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்டம், நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய இரு இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த செப்.12-ம் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள இவ்விரு குவாரிகளின் அலுவலகம், அங்குள்ள ஒரு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதையடுத்து கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இரு மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி இவ்விரு மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? என அளவீட்டு நிபுணர்களைக் கொண்டும்’ அளவீட்டு கருவிகளை கொண்டும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து நன்னியூர் மணல் குவாரி, நன்னியூர் புதூர் அரசு மணல்கிடங்கு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் (கடந்த 18ம் தேதி) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் எத்தனை யூனிட் மணல் வழங்கப்படுகிறது. எத்தனை ரூபாய்க்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது. கட்டணம் எவ்வாறு செலுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்களைக் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் கரூர் மாவட்ட மணல் குவாரிகளில் 3-வது முறையாக அமலாக்கத்துறை இன்று (அக். 20ம் தேதி) சோதனை மேற்கொண்டனர். 2 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வாங்கல் அருகே மல்லம்பாளையம் முதல் சேனப்பாடி வரையும், மணல் அள்ளப்பட்ட இடங்கள் மேலும் இதற்கு முன்பு மணல் குவாரிகள் செயல்பட்ட இடங்கள் ஆகியவற்றில் டிஜிட்டல் சர்வே இயந்திரங்களைக் கொண்டும், ட்ரோன்காமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x