Published : 18 Oct 2023 05:08 PM
Last Updated : 18 Oct 2023 05:08 PM

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: ஆயுள் தண்டனை கைதி பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு மூன்று மாதம் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “29 ஆண்டுகளாக எனது தந்தை சிறையில் உள்ளார். குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட குறைவான தண்டனையை தனது தந்தை அனுபவித்துவிட்டார். இந்த நிலையில், தற்போது ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவித்து வருகிறார். எனவே, எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். 85 வயது முதுமை மற்றும் அவரது உடல்நிலை காரணங்களை கருத்தில் கொண்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, எனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, இடைக்கால ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஷாவுக்கு மூன்று மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x