Last Updated : 16 Oct, 2023 08:29 PM

 

Published : 16 Oct 2023 08:29 PM
Last Updated : 16 Oct 2023 08:29 PM

ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கு: மாவட்ட வாரியாக பங்கேற்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்டம் வாரியாக ஊர்வலத்தில் பங்கேற்போர் விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, தேனி - திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக். 22-ல் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களில், இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும், அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டியும் விஜயதசமி நாளான அக். 22-ல் ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணிந்து, இசை வாத்தியத்துடன் மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அந்தந்த காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி தரவில்லை.

கடந்த ஆண்டிலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன் பிறகும் அனுமதி தரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு அனுமதி பெறப்பட்டது. எனவே, இந்தாண்டு ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிரு்ந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், விஜயதசமி நாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காக்கிபேண்ட், வெள்ளை சட்டை மற்றும் தொப்பி அணிந்து கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் செல்வர். ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்றார்.

அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், தென் தமிழகத்தில் 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி அளித்த மனுக்களில் ஊர்வலம் எங்கு தொடங்கி எங்கு முடியும், யார் யார் பங்கேற்கிறார்கள், ஊர்வலப் பாதையில் பிற மத வழிபாடு ஸ்தலங்கள் உள்ளதா என்ற தகவல்கள் இல்லை.

ஆர்எஸ்எஸ் துண்டு பிரசுரங்களில் சர்ச்சைக்குரிய பிரிவினையை தூண்டும் வாசகங்கள் உள்ளன. இதனால் ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆர்எஸ்எஸ் சங்க அமைப்பா? அறக்கட்டளையா? கட்சியா? என்பது தெரியவில்லை. ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?

தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட உள்ளனர். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தால் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் மாவட்டம் வாரியாக யார் யார் பங்கேற்கிறார்கள்? ஊர்வலம் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும்? என்ற முழு விபரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x