Published : 16 Oct 2023 06:43 PM
Last Updated : 16 Oct 2023 06:43 PM

வாச்சாத்தி மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: 6 வாரங்களில் சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருவரும் அடுத்த 6 வாரங்களுக்குள் தருமபுரி நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையிட்டனர். வீடு,வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை நடவடிக்கையின்போது கிராம மக்கள் மீது கடும்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட பெண்கள் 1993-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 1995-ம்ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டிலேயே ஒரு வழக்கில்அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும், தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இதில் ரூ.5 லட்சம் அரசாங்கமும், ரூ 5.லட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் உத்தரவிட்டிருந்தார். அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் முதல் குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் அறிவித்து தண்டனை விதித்திருந்த ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன், பாலாஜி மற்றும் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, "வாச்சாத்தி வழக்கில், வேண்டுமென்றே சாதி ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழிவாங்கும் விதமாக எல்.நாதன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்து வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதே கோரிக்கையை மற்றொரு குற்றவாளியான பாலாஜி என்பவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமாரும் முன்வைத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட எந்த நிவாரணமும் மனுதாரர்கள் இருவருக்கும் வழங்க முடியாது. எனவே, இருவரது மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடுத்த ஆறு வாரங்களுக்குள் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x