Last Updated : 15 Oct, 2023 04:51 PM

 

Published : 15 Oct 2023 04:51 PM
Last Updated : 15 Oct 2023 04:51 PM

பரமத்தி வேலூர் அருகே 2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

பரமத்தி வேலூர் அருகே வெட்டி சாய்க்கப்பட்ட வாழை மரங்கள்

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம். இவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் 1750 வாழை மரங்கள் நடவு செய்து பராமரிப்பு செய்து வந்துள்ளார். இம்மரங்கள் அனைத்தும் ஆறு மாத கால வயதுடையவை. இன்று காலை விவசாயி தர்மலிங்கம் வழக்கம்போல் தனது விவசாய தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி விடவும் பராமரிப்பு செய்யவும் சென்றுள்ளார். அப்போது விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன.

இதுபோல் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் என்பவரது விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 250 வாழை மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம் சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதிகாலை வேளையில் விவசாய தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மரங்களை வெட்டி சாய்த்தது தெரியவந்தது. எனினும் மரங்களை வெட்டிய கும்பல் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. இதனிடையே நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் மற்றும் திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் அசம்பாவிதம் தவிர்க்க கொந்தளம் சுற்று வட்டார கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயி தர்மலிங்கம் அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த மார்ச் 11ம் தேதி மாதம் கரப்பாளையத்தைச் சேர்ந்த நித்யா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ள உற்பத்தி ஆலைகளுக்கு தீ வைத்தல், விவசாயத் தோட்டத்தில் வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்ப்பது, வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது பெட்ரோல் கொண்டு வீசுதல், பள்ளி வாகனங்களை எரித்தல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.

இதை கட்டுப்படுத்த சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த ஆறு மாத காலமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு மர்ம நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது தவிர தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த மாதம் 11 பேரை ஜேடர்பாளையம் காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இச்சூழலில் நேற்று மீண்டும் விவசாயத் தோட்டத்தில் வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x