Published : 13 Oct 2023 02:21 PM
Last Updated : 13 Oct 2023 02:21 PM

ஆபரேஷன் அஜய் | நாடு திரும்பிய 214 இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 21 பேர்!

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்.

சென்னை: "ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் வந்த விமானத்தில் முதற்கட்டமாக 214 பேர் இந்தியா்கள் வந்துள்ளனர். இந்த 214 பேரில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் வந்துள்ளனர்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வரின் வேண்டுகோளினை ஏற்று அங்கிருப்பவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும் தற்போது இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அங்குள்ள தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்த நபர்களில் கோவை, திருவள்ளூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 12.10.2023 அன்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு புதுடெல்லி வந்தடைந்தனர்.

இந்த முயற்சியில், தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே, அந்தவகையில், புதுடெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லம் மூலம் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இவர்களுக்கு தமிழக அரசின் செலவில், விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 14 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு தற்போது வந்தடைந்துள்ளனர். இதில் ஒரு 7 பேர் கோவை விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த இந்த 14 பேரில், இருவர் மாணவிகள், 12 பேர் மாணவர்கள். கல்வி கற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றவர்கள். மூன்று மாதங்களுக்கு முன்னால் இஸ்ரேல் சென்றவர்கள்கூட இதில் உள்ளனர்.

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் வந்த விமானத்தில் முதற்கட்டமாக 214 பேர் இந்தியா்கள் வந்துள்ளனர். இந்த 214 பேரில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 114 பேர் இருப்பதாக அயலகத் தமிழர் துறையின் சார்பில் கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பவர்களுடன் அயலகத் தமிழர் துறையின் ஆணையர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். எனவே அவர்கள் அனைவரையும் மீட்கும் முயற்சி தமிழக அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்தடைந்த 14 தமிழர்களை தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் அயலகத் தமிழர் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x