Published : 13 Oct 2023 04:48 AM
Last Updated : 13 Oct 2023 04:48 AM

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, 2019-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.

இதனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து மறுபுறம் விசாரணை மேற்கொண்டு, மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில், 2019 மற்றும் 2021-ல் மொத்தம் ரூ.277.59 கோடி, 2022-ல் ரூ.173.48 கோடி மதிப்புகளில், அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.

கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.456.86 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து கோவையில் மார்ட்டின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் மார்ட்டினின் வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.

இதேபோல், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் மருமகன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மார்ட்டினின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்டினின் மகனுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மற்றும் சென்னையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸார், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x