Published : 12 Oct 2023 05:14 AM
Last Updated : 12 Oct 2023 05:14 AM

சட்டப்பேரவையில் 10 மசோதாக்கள் நிறைவேற்றம்

கோப்புப்படம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு, எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் நிதி தொடர்பானவை உள்ளிட்ட 10 சட்ட முன்வடிவுகள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், அறிமுகம் செய்யப்பட்ட 7 சட்ட முன்வடிவுகளில் சமாதான திட்டம் உள்ளிட்ட 3 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. மேலும் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 4 சட்ட முன்வடிவு, மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு மற்றும் நிதி தொடர்பான சட்ட முன்வடிவுகள் என 6 மசோதாக்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. இறுதியில் 10 சட்ட முன்வடிவுக்களும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இதன்மூலம், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுவதற்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதுதவிர, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தின் கீழ், வேளாண் மண்டலத்தில், ஏற்கெனவே உள்ள மாவட்டங்களுடன் புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்தல், அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்ட வேளாண்மை என்ற சொல்லின் கீழ், கால்நடை பராமரிப்பு, உள்நாட்டு மீன்வளம் என்பதை சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் உறுப்பினர்களாக நீர்வளத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள், நீர்வளத் துறை செயலர், உணவுத்துறை செயலர் ஆகியோரை சேர்த்தல் ஆகியவற்றுக்கான சட்ட முன்வடிவுவும் நேற்று நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x