Published : 11 Oct 2023 06:10 AM
Last Updated : 11 Oct 2023 06:10 AM

சிறுநீரக கோளாறால் அவதிப்படும் மருத்துவருக்கு தமிழக மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது சட்டவிரோதம்: உயர் நீதிமன்ற நீதிபதி

சென்னை: சிறுநீரக பாதிப்பால் அவதியடைந்துள்ள மருத்துவரான காஜா மொய்னுதீனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து சிறுநீரகம் பெற முடியவில்லை என்பதால் ராமாயி என்பவர் காஜா மொய்னுதீனுக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்துள்ளார்.

ஆனால் இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்ததால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை இந்த அறுவை சிகிச்சையை செய்ய முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தமிழக அரசிடமிருந்து தடையில்லா சான்று பெற்று வரும்படி கொச்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால், தனக்கு தடையில்லா சான்று வழங்கக்கோரி மருத்துவரான காஜா மொய்னுதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.காஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார். அப்போது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில் உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர் இன்று அவருடைய உயிரைப் பாதுகாக்க போராடி வருகிறார் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

மேலும், உறவினர்கள் அல்லாதோரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மறுப்பது சட்டவிரோதம் என நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன் மனுதாரரான மருத்துவர் காஜா மொய்னுதீனும், அவருக்கு சிறுநீரகம் அளிக்க முன்வந்துள்ள நன்கொடையாளரும் ஒரு வாரத்தில் மருத்துவக்குழு முன்பாக ஆஜராக வேண்டும். அவர்களிடம் கோவை வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்கீழ், அதற்கான அங்கீகார குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை மீது அங்கீகாரக்குழு 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாத சூழலிலும், உறவினர்கள் அல்லாதோர் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும்போது மருத்துவமனை நிர்வாகங்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை சக மருத்துவருக்கே மேற்கொள்ள தயக்கம் காட்டுவது என்பது மனிதாபிமானமற்றது.

எனவே இதுதொடர்பாக மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x