Published : 08 Oct 2023 04:13 PM
Last Updated : 08 Oct 2023 04:13 PM

சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு: முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்

சென்னை: இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் ஆகியோர் இன்று (அக்.8) சந்தித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை வழங்கி மகளிரின் ஊதியமில்லா உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைக்கும், விடுபட்டு போனவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பளித்தமைக்கும் முதல்வருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இண்டியா கூட்டணி சார்பில் அகில இந்திய அளவில் 5 முக்கிய நகரங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி பெருந்திரள் மாநாடுகள் நடத்திட சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். அந்த அடிப்படையில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை இண்டியா கூட்டணி சார்பில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும்,

> வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறைம வழக்கில் 31 ஆண்டுகளாக நடந்து வரும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை அமல்படுத்துவது, குறிப்பாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு - அரசு வேலை, நிரந்தர வீடு, மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் நிறைவேற்றுவது,

> ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக கடுமையான தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறுவது,

> நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்வது,

> அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கிடுவது,

> பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்விடுப்பு வழங்குவது; சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் - ஓய்வூதியம் வழங்குவது; தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது; அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது,

> இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, காலை சிற்றுண்டித் திட்டம் உள்ளிட்டு அரசின் நலத் திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்குவது,

> அரசாணை எண் 354 படி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது,

> மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையினை வழங்குவது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, கேங் மேன் பணியாளர்களை நியமிப்பது,

> திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் தாக்குதலுக்கு ஆளான மாணவர், மற்றும் அவரது தங்கையின் பள்ளி படிப்பை தொடரவும், அக்குடும்பத்துக்கு அரசு வீடும், வேலையும் வழங்குவது, சந்திரா செல்விக்கு தமிழக அரசின் வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த முதல்வர், அரசு இவைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்கள்.

இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x