Last Updated : 07 Oct, 2023 04:55 PM

 

Published : 07 Oct 2023 04:55 PM
Last Updated : 07 Oct 2023 04:55 PM

ஊராட்சி தலைவர்களிடம்தான் குடிநீர் திட்ட டெண்டர் அதிகாரம் இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

பிரதிநிதித்துவப்படம்

மதுரை: “குடிநீர் திட்டங்களுக்கான டெண்டர் விடும் அதிகாரம், ஊராட்சித் தலைவர்களிடம்தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கியது சரியல்ல” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.எம்.முனியாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியா முழுவதும் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கான டெண்டர் விடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 15.9.2023-ல் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி தலைவர்களுக்கான அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். எனவே, ஜல் ஜீவன் திட்டத்துக்கான டெண்டர் விடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அந்த அதிகாரத்தை ஊராட்சித் தலைவர்களிடம் மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நோடல் அமைப்பு மூலம் வட்டார அளவில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை 3 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இதுபோன்ற வழக்கில் டெண்டர் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், “பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் முக்கியமான நோக்கமே கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக அதிகாரம் வழங்குவது தான். கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவது கிராம ஊராட்சிகளின் அடிப்படை கடமையாகும். ஊராட்சி தலைவர்களுக்கான அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்குவது ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “கிராமங்களில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதே ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் குடிநீர் தொடர்பான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தான் மேற்கொள்ள வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. எனவே ஊராட்சித் தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக் கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. ஊராட்சித் தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நிலைக்கு தள்ள முடியாது.

இந்தியாவில் கூட்டாட்சி முறை, அதிகாரப் பகிர்வைக் கோரும் மாநில கட்சிகள், மாநிலத் தலைநகரங்களில் அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது ஏன்? எனவே இதேபோன்ற கோரிக்கையை மற்றொரு நீதிபதி நிராகரித்துள்ள நிலையில், தற்போது இந்த மனுவை நான் ஏற்பது முறையாக இருக்காது. எனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதி முன்பு பதிவுத்துறை பட்டியலிட வேண்டும்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x