Last Updated : 04 Oct, 2023 05:29 PM

1  

Published : 04 Oct 2023 05:29 PM
Last Updated : 04 Oct 2023 05:29 PM

தூத்துக்குடியின் 33 ஊராட்சிகளில் சாதி பெயரிலான 80 தெருக்களின் பெயரை மாற்றும் ஆட்சியரின் முயற்சிக்கு ஆதரவு!

தூத்துக்குடி: சாதி பெயரில் தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட்டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள சாதி பெயரில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சாதி ரீதியான மோதல் காரணமாக வெட்டப்பட்டனர். இதையடுத்து சாதிய மோதல்களை தடுக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சாதிய அடையாளங்கள்: இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள சாதி ரீதியான அடையாளங்களை பொதுமக்களின் உதவியோடு அகற்றும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் களம்இறங்கியது. இதன் முதல் நடவடிக்கையாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற பரிந்துரை செய்தார். இதனை மேல ஆத்தூர் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து மேல ஆத்தூர் ஊராட்சியில் சாதி பெயரில் இருந்த 9 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 9 தெருக்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் சூட்டப்பட்டது.

ஆட்சியர் நடவடிக்கை: இதன் தொடர் நடவடிக்கையாக மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர்களுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். ஆட்சியரின் இந்த வேண்டுகோளை தற்போது மேலும் 33 ஊராட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 ஊராட்சிகளில் சாதி பெயர்களில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஒன்றியத்தில் வர்த்தகரெட்டிபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, அல்லிகுளம், கோரம்பள்ளம், தெற்குசிலுக்கன்பட்டி, கருங்குளம் ஒன்றியத்தில் கொங்கராயகுறிச்சி, கலியாவூர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் அணியாபரநல்லூர், இடையர்காடு, சூளைவாய்க்கால், அகரம், மாரமங்கலம், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் அங்கமங்கலம், கடையனோடை, வெங்கடேசபுரம், சேந்தமங்கலம், உடன்குடி ஒன்றியத்தில் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி ஒன்றியத்தில் செமபுதூர், கயத்தாறு ஒன்றியத்தில் உசிலங்குளம், தெற்கு மயிலோடை, அய்யனார்ஊத்து, சோழபுரம், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மீனாட்சிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான், கே.தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, பரிவல்லிக்கோட்டை, புதூர் ஒன்றியத்தில் மாசார்பட்டி, மேலக் கல்லூரணி, முத்தையாபுரம், முத்துசாமிபுரம் ஆகிய 33 ஊராட்சிகளில் உள்ள மொத்தம் 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்: இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் தெருக்களின் பெயர்கள் சாதிய அடையாளங்களுடன் இருந்தன. அவற்றை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை அமைக்குமாறு கிராம ஊராட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். இதனை ஏற்று மேல ஆத்தூர் கிராம ஊராட்சியில் சாதி பெயரில் அமைந்த 9 தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 33 கிராம ஊராட்சிகளில் 80 தெருக்களின் சாதி பெயர்களை நீக்கி பொதுவான பெயர்களை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசிதழில் வெளியீடு: மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தெருக்களின் சாதி பெயர்களை நீக்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. தெருக்களின் பெயர் மாற்றம் விரைவில்அரசிதழில் வெளியிடப்பட்டு, புதிய பெயர்களை நிரந்தரமாக அனைத்து ஆவணங்களிலும் இடம் பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மற்ற ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் சாதி பெயரிலான தெருக்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x