Last Updated : 03 Oct, 2023 03:11 PM

 

Published : 03 Oct 2023 03:11 PM
Last Updated : 03 Oct 2023 03:11 PM

பெயர் பலகைகள், மின் பெட்டிகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள்: சென்னையில் பொலிவிழக்கும் பொது சொத்துகள்

நுங்கம்பாக்கம் பள்ளி சாலை பெயர் பலகை.

சென்னை: பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ‘போஸ்டர்’ அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாச்சாரம் பெருகி விட்டது. சாலையில், நடந்து செல்லும்போது, திரும்பும் திசையெல்லாம், பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

அந்த வகையில், சுவரொட்டிகள், பேனர்கள் மூலம் பொது இடங்கள், பொது சொத்துக்களை சிதைப்பதை பலர் வாடிக்கையாக கொண்டிருக்கிருக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது போல, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் சாலை மற்றும் தெரு பெயர் பலகைகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இதனால், பெயர் பலகையில் உள்ள சாலை அல்லது தெருக்களின் பெயர்கள் முழுவதுமாக மறைக்கப்படுகிறது. சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு முகவரியை கண்டுப்பிடிப்பதில் இதனால் சிரமமும் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலை பெயர் பலகையில் அதிகளவில் கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன.

கூகுள் மேப் மூலம் பார்த்து வந்தாலும் பெயர் பலகையை பார்த்துதான் முகவரியை உறுதி செய்ய முடிகிறது. இதனால் மீண்டும் மீண்டும் அதே பகுதியில் சாலை அல்லது தெருக்கள்பெயரை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர். இதுமட்டுமில்லாம், சாலை ஓரமாக இருக்கும் மின்பெட்டிகள் சுவரொட்டிகளின் அடுத்த குறியாக உள்ளது. விளம்பரம் செய்வதற்காக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல பயன்படுத்து கின்றனர்.

இதனால், மின் பெட்டியில் பழுது நீக்க வரும் மின் ஊழியர்கள், அந்த மின் பெட்டிகளின் கதவை திறப்பதற்கு முன்பாக, அதில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை முதலில் அகற்றுவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறார்கள். இதுபோன்ற பொது சொத்துகள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால், அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. சென்னையில் எந்த பகுதிக்கு போனாலும் இதேபோன்ற நிலையை பார்க்க முடிகிறது.

சென்னையை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் நகரின் அழகை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற போஸ்டர் கலாச்சாரம் பெரும்இடையூறாக உள்ளன. இதற்கு ஒரு நிரந்தரதீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வரதன் அனந்தப்பன்

இதுகுறித்து மடிப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்ற வரையறை உள்ளது. அதையும் மீறி பலர் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். போஸ்டர்கள், விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதாக இருந்தால், தனியாருக்கு சொந்தமான இடங்களில், அவர்களின் அனுமதி பெற்று ஒட்டிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்துவது நியாயமற்றது.

சுவரொட்டிகளை ஒட்டி அரசு சொத்துகளை சேதப்படுத்துவதால், அதனை சரி செய்வது, அரசுக்கு கூடுதல் பணிச்சுமையாகி விடுகிறது. ஒட்டப்படும் சுவரொட்டிகளிலே அவர்கள் தொடர்பான முழு விவரங்களும் அடங்கியிருக்கும். எனவே, மாநகராட்சியும், அரசும், அந்த விவரங்களை வைத்தே சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை தீவிரமாக்கினாலே இதுபோன்ற செயல்களை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

கீழ்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள மின்பெட்டி.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சியில் தூய்மையை பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும், மாநகராட்சி கட்டிடங்கள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும், பொதுமக்கள் சாலை, தெருக்கள் பெயரை தெரிந்து கொள்ள, வார்டு எண், பகுதி எண், மண்டலம் எண், அஞ்சல் குறியீட்டுடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டுகின்றனர். தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெயர் பலகையில், துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பொதுஇடங்களில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.அந்தவகையில், சாலை பெயர் பலகைகள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களில்சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

செல்போனில் கூகுள் மேப் மூலம் பார்த்து வந்தாலும் தெரு பெயர் பலகையை பார்த்தால்தான் தேடி வந்த முகவரியை உறுதி செய்ய முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x