Published : 03 Oct 2023 05:39 AM
Last Updated : 03 Oct 2023 05:39 AM

அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும்: கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களும் வளர வேண்டும். தற்சார்புள்ள, தன்னிறைவு பெற்ற, எல்லா வசதிகளும் கொண்ட, சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு எந்நாளும் உழைக்கும் என்று கிராமசபை கூட்டத்தில் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலி மூலமாக பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்.

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த இடமாக உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. தேர்தலில் போட்டியிடும் அனைவரது பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்தில் போட்டு குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அதில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இந்த ‘குடவோலை’ முறையில்தான் தமிழகத்தில் மக்களாட்சி அமைப்பு மலர்ந்தது. தமிழகத்தில் சோழர் காலம் முதலே கிராமசபை என்ற அமைப்பு இருந்து வருகிறது.

கிராமசபையில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்கள் தேவைகள், பயனாளிகளை தேர்வு செய்வதுடன், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் பங்காற்றுகின்றனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவைபோல, கிராமசபையும் மக்கள் குரலை எதிரொலிக்கும் மன்றமாக உள்ளது.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளின் பணி முன்னேற்றத்தை கண்காணித்தல், வரவு செலவு ஆய்வு, பயனாளிகள் தேர்வு, திட்ட கண்காணிப்பு ஆகிய அதிகாரங்கள் கிராமசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில்தான் கிராமசபை கூட்டங்கள் முறையாக, தடங்கலின்றி நடத்தப்படுகின்றன.

கிராமசபைகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். கல்விக்கான அரசின் முயற்சிகளில் கிராமசபைகள் முக்கிய பாலமாக இருக்க வேண்டும். காலை உணவு, எண்ணும் எழுத்தும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற திட்டங்களை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். அதேநேரம், ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு தேவையானதை மட்டுமே கிராமசபையில் விவாதிக்க வேண்டும்.

கிராமசபையில் ஆர்வம் இல்லாத மக்களிடம், அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அதில் பங்கேற்க செய்ய வேண்டும். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்களது கருத்துக்கு உரிய முக்கியத்துவமும் தரவேண்டும். தேர்வு செய்யப்படும் பணிகள் பொதுவானதாகவும், எல்லோருக்கும் பயன் தரும் வகையிலும் இருக்க வேண்டும். கிராமசபையில் அனைவரது கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

நீர்ஆதாரங்களை வளப்படுத்துதல், நீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்நிலை பாதுகாப்பு போன்ற ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம், முறையான திட, திரவக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள உறுதி எடுக்க வேண்டும். அதற்கேற்ப ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.06 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர். விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிராமப்புற பெண்கள்தான் அதிகம் பயனடைகின்றனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்தி வருகிறோம். இப்படி, கிராமங்கள், கிராம மக்களின் முன்னேற்றத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களும் வளர வேண்டும். பொருளாதாரம், தொழில் மட்டுமின்றி, சமுதாயமும் வளர்ச்சி பெற வேண்டும். அதுவே உண்மையான மாநில வளர்ச்சி. அதற்கு கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் திட்டங்களை செயல்படுத்துகிறோம். தற்சார்புள்ள, தன்னிறைவு பெற்ற, எல்லா வசதிகளும் கொண்ட, சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு எந்நாளும் உழைக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x