Published : 03 Oct 2023 06:14 AM
Last Updated : 03 Oct 2023 06:14 AM

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு: பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டம்

சேலத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.குருபிரசாத்

சேலம்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலத்தில் நேற்று நடைபெற்ற சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது, ரூ 2.23 லட்சம் கோடி கடன் இருந்தது. அதற்கு வட்டியாக ரூ.1 லட்சம் கோடி செலுத்தினோம். ஆனால், கரோனா, ஜிஎஸ்டி பாதிப்புகளுக்கு இடையில் அதிமுக ஆட்சியில் விட்டுச் சென்றது ரூ.81 ஆயிரம் கோடி கடன் மட்டும்தான். திமுக ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல் நிலவுகிறது. இதனால்தான், இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அஸ்தம்பட்டி பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார்.

திராவிட மாடல் என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றிவரும் திமுக அரசின் தவறுகளை, புள்ளி விவரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். திமுகவின் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், சேலம் மாவட்டத்துக்கு ஒரு திட்டம்கூட தரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தைதான் திறந்து வைக்கின்றனர்

மேட்டூர் அணையில் தற்போது 36 அடி நீர்மட்டமே உள்ளது. இன்னும் 6 அடி குறைந்தால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்து 7 மாதங்களுக்குப் பிறகுதான் மேட்டூர் அணைக்கு பருவமழையால் தண்ணீர் கிடைக்கும். தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்கள், மேட்டூர் அணை மற்றும் காவிரிநீரை குடிநீருக்காக நம்பியுள்ளன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். ஆனால்,தமிழக முதல்வர் எதைப் பற்றியும் கவலையின்றி இருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x