Published : 03 Oct 2023 07:02 AM
Last Updated : 03 Oct 2023 07:02 AM

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 3) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: அக். 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம நாலுமுக்குவில் 11 செ.மீ., ஊத்து பகுதியில் 10 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், களியல், தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, திருநெல்வேலி மாவட்டம் காக்கச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள்மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x