Published : 02 Oct 2023 05:46 AM
Last Updated : 02 Oct 2023 05:46 AM

காவிரி நீரை பெறுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரை பெற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசனத்துக்கு முன்யோசனையின்றி ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்துவிட்டார். திமுக அரசின் பேச்சை நம்பி, காவிரி டெல்டா பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கு சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தங்கள் கையில் இருந்த பணம், நகை, விதை நெல், வங்கி கடன் மற்றும் உடல் உழைப்பையும் மூலதனமாக்கி, 5 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியை தொடங்கினர். ஆனால், குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர் கருகியது. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கரில் கிணற்றுப் பாசன உதவியோடு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதமே கர்நாடக அரசிடம் நட்பாக பேசி காவிரியில் தண்ணீரை திறந்தவிடச் செய்திருக்கலாம். இண்டியா கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்து விட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.

இது எதையும் செய்யாமல் மத்திய அரசை காரணம் காட்டி தமிழக மக்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருப்பதை தவிர்த்து, திமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, தமிழக மக்களின் உரிமையைக் காத்திட, காவிரி நீரை விரைந்து பெற்றிட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x