Published : 02 Oct 2023 07:24 AM
Last Updated : 02 Oct 2023 07:24 AM

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் முன் அறிவிப்பின்றி மின்சார ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அவதி

கோப்புப்படம்

சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை முன் அறிவிப்பின்றி, மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பல்வேறு ரயில் நிலையங்களில் மின்சார ரயிலில் செல்லவந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணிக்கின்றனர். இதன் காரணமாக, இந்தவழித்தடம் காலை முதல் இரவு 11 மணி வரை பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில், கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை எவ்வித முன் அறிவிப்பின்றி, திடீரென மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கடற்கரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து மின்சார ரயில்களில் செல்ல பயணிகள் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ரயில்கள் வராததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து, பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் படையெடுத்தனர். இதுபோல, மெட்ரோரெயில் நிலையங்களில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

சில ரயில் நிலையங்களின் வெளியே ஒரு அறிவிப்பு பலகைவைக்கப்பட்டது. அதில், பராமரிப்புபணி காரணமாக, தாம்பரம், சென்னை கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் மதியம் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் செல்ல வந்த பயணிகள் சிலர் கூறியதாவது: ரயில் சேவை நிறுத்தம் தொடர்பாக, எந்தவித முன் அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், எங்களுக்கு காலவிரயமும், அலைச்சலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை சேவை குறைவுதான். இப்போது, முழுமையாக நிறுத்தி உள்ளனர். ரயில் சேவை நிறுத்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முறையாக முன் அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவை காலை 10 மணி முதல் 3 மணி திடீரென நிறுத்தப்பட்டது. மொத்தம் 22 ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு பிறகு, ரயில் சேவை சீரானது" என்றனர்.

இன்றும் 41 மின்சார ரயில்கள் ரத்து: கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (அக்.2) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை வழித்தடங்களில் இன்று (அக்.2) காலை 11 மணி முதல் 3.15 மணி வரையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி, மொத்தம் 41 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட உள்ளன. அதேநேரத்தில், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே முற்பகல் 11.55, நண்பகல் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, பிற்பகல் 2.40, 3.10 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும்.

மறுமார்க்கமாக காலை 9.30, 10.55, முற்பகல் 11.30, நண்பகல் 12 மணி, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x