Published : 30 Sep 2023 05:41 AM
Last Updated : 30 Sep 2023 05:41 AM

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசன் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசன் மலர்க் கண்காட்சியை நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்ட சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசன் மலர்க் கண்காட்சியை, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுலாத் துறையில் நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. விரைவில் தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 4 லட்சம் மலர்ச் செடிகளுக்கான பாத்திகள் அமைக்கப்பட்டன. தற்போது அவற்றில் மலர்கள் பூத்து, சுற்றுலாப் பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

மேலும், 7,500 மலர்த்தொட்டிகளைக் கொண்டு புல்வெளியில், இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் சந்திரயான்-3 விண்கல வடிவமைப்பும், நெகிழிப் பைகளைத் தவிர்க்கும் வகையிலானமீண்டும் மஞ்சப் பை திட்ட வடிவமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுஉள்ளது.

இந்த மலர்க் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஒரு மாதம் பார்வையிடலாம். இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 21 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். தற்போதைய 2-வது சீசன் மலர்க் கண்காட்சியை 3 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x