Published : 29 Sep 2023 05:43 AM
Last Updated : 29 Sep 2023 05:43 AM

பாஜக நிர்வாகிகளுடன் அக்.3-ல் அண்ணாமலை ஆலோசனை

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அக்.3-ம் தேதி அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணா பற்றி சமீபத்தில்அண்ணாமலை பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் கண்டனம்தெரிவித்தனர். தொடர்ந்து, டெல்லியில் அமித்ஷாவை, பழனிசாமி சந்தித்தார். அப்போது, அதிமுகவினரை அண்ணாமலை விமர்சிப்பது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பழனிசாமி பேசினார்.

இதையடுத்து, சென்னையில், கடந்த 25-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டசெயலாளர்களுடன் பழனிசாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.அதில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என தீர்மானம்நிறைவேற்றப்பட்டு அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், பாஜகமுன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என நேற்று பதிவிட்டுள்ளார். மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இன்றி, இனி வரும் தேர்தல்களை பாஜக தனித்து எதிர்கொள்ளும் என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘என் மண் என்மக்கள்’ பாத யாத்திரையில் இருக்கும் அண்ணாமலை, பாதயாத்திரையை இடையில் நிறுத்திவிட்டு,அக்.3-ம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக - அதிமுககூட்டணி முறிவால், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை, அதிமுக ஆதரவு இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, மற்றகட்சிகளுடனான கூட்டணி நிலவரம்உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பை அண்ணாமலை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x