Published : 28 Sep 2023 03:47 PM
Last Updated : 28 Sep 2023 03:47 PM

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு முக்கியத்துவம் கிடைக்குமா? - அதிமுக விலகலால் காத்திருக்கும் ஆச்சரியங்கள்

மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியதால் அக்கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரனுக்கு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அமைச்சர், துணை முதல்வர், முதல்வர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என முக்கிய பதவிகளை அலங்கரித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அதிகார மையத்துக்கு வரவே கட்சியில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு தர்ம யுத்தம் தொடங்கினார்.

அப்போது அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் பின்னர் பழனிசாமி அணியிலும், திமுகவிலும் ஐக்கியமாகி விட்டனர். அதிமுக கட்சி தொடர்பாக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் பழனிசாமிக்கு சாதகமாக முடிவுகள் வந்தன. இதையடுத்து திருச்சியில் தனது ஆதரவாளர்களைத் திரட்டி மாநாடு நடத்தி ஓபிஎஸ் தனது பலத்தை காட்டினார். ஆனால், பாஜக மேலிடம், தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளித்தது.

அதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது அமைதியாக உள்ளார். சமீபத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திலும் பிரதமர் மோடி, பழனிசாமியை அருகே அமரவைத்து முக்கியத்துவம் அளித்தார். ஆனால், தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அண்ணா வையும், ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்ததால் அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், அண்ணாமலை தனது கருத்தைத் திரும்பப் பெறாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

அதனால், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க அதிமுக தலைமை அழுத்தம் கொடுத்தும் பாஜக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பழனிசாமியிடம், கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி.தினகரனையும் சேர்த்துக் கொள்ளப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்கு கே.பழனிசாமி தரப்பு மறுக்கவே தங்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கினால் அதை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் உள்ளிட்டோருடன் பகிர்ந்து கொள்வதாக சொல்லப் பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பழனிசாமி, உடனடியாக சென்னை திரும்பி ஜெயலலிதா பாணியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக விலகி யதால், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் எனவும், அவர்களுடன் சசிகலாவையும் ஒருங்கிணைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் உள்ளதால் அதற்குள் அதிமுகவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சி நடக்கலாம். அதிமுகவின் திடீர் முடிவால் ஓ.பி.எஸ். தரப்பினர் பாஜக ஆதரவுடன் அதிமுகவைக் கைப்பற்ற காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் சேராமல் நின்று கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றினால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் அரசியல் கணக்கு நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே மற்றொரு தரப்பினர், மக்களவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணியை உடைக்க பாஜகவும், அதிமுகவும் இணைந்து செய்யும் திட்டம் எனவும் கூறுகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்க,நெருங்க தமிழக அரசியலில் இன்னும் பல ஆச்சரியங்கள் நடக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x