Published : 28 Sep 2023 01:51 PM
Last Updated : 28 Sep 2023 01:51 PM

கிளாம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அக்டோபருக்குள் முடிக்க திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு

செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் ஆகியவற்றை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு இன்று (செப்.28) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும்.

முதல்வரின் உத்தரவின் பேரில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் அளவுக்கு போர்க்கால அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால் பணியானது அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதே போல, நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.16.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளான அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாடமி சாலை-கூடுவாஞ்சேரி-ஊனமஞ்சேரி சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-மண்ணிவாக்கம்-ஆதனூர் சாலை ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இப்பேருந்து முனையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். இப்பேருந்து முனையத்தில் காவல் நிலையம் ரூ.14 .80 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. முடிச்சூர் சென்னை வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி ரூ.29 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், தாம்பரம் காவல் ஆணையர் (போக்குவரத்து) என்.குமார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x