Published : 27 Sep 2023 05:17 AM
Last Updated : 27 Sep 2023 05:17 AM

விழுப்புரம் நிலப்பதிவு விவகாரம் | வழக்கு பதிய அமலாக்கத் துறைக்கு உத்தரவு

சென்னை: தருமபுரியைச் சேர்ந்த டி.சி.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தாவது: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடமிருந்து வாங்கி வானூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம்.

ஆனால், புதுச்சேரியை சேர்ந்த டி.ராமராஜ், கடலூரைச் சேர்ந்த சி.கே.எஸ்.கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வேலு, தடபெரும்பாக்கம் பொன்.ராஜா, நாமக்கல் எம்.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிலத்துக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த நிலத்தை பதிவு செய்து கொடுக்க முடியாது என்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ. பல லட்சத்தை லஞ்சமாக தர வேண்டுமெனக் கோருகின்றனர். எனவே எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வானூர் சார்-பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக கடந்தமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.ரமன்லால் ஆஜராகி, வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் டி.சி.இளங்கோவன், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நெருங்கிய உறவினர். இவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க அரசியல் செல்வாக்கு மிக்க சி.கே.எஸ்.கார்த்திகேயன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த நிலத்துக்கான அசல் பத்திரங்கள் மாயமாகி விட்டது எனக்கூறி புதுச்சேரி காலாபட்டு போலீஸில் புகார் செய்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் பெற்றுள்ளனர், என தெரிவித்திருந்தார்.

பல கோடி கைமாறியுள்ளது: அதையடுத்து நீதிபதி, இந்த நில விற்பனையில் ரூ. பல கோடி கைமாறியுள்ளதால் இந்த வழக்கில் வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை, காலாபட்டு காவல் ஆய்வாளர் மற்றும் பத்திரப்பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்திகேயன், ராமராஜ் உள்ளி்ட்டஅனைவரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவி்ட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.சந்திரசேகரன், பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, இந்த நிலத்தின் பத்திரங்களை கார்த்திகேயன் உள்ளிட்டோர் எடுத்துச்சென்று விட்டதாக மீண்டும் காலாபட்டு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே மனுதாரர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காலாபட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் அடிப்படையில் அந்த நிலத்துக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்துள்ளதாக கூறப்படும் நபர்கள் மீது மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

அதேபோல, வருமான வரித்துறை அதிகாரிகளும் இதற்கான ரிஷிமூலத்தை கண்டறியும்வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், எனக்கூறி விசாரணையை அக்.16-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x