Published : 21 Sep 2023 01:38 PM
Last Updated : 21 Sep 2023 01:38 PM

கார் டிரைவர் அக்கவுண்டில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ. 9000 கோடி - பேச்சுவார்த்தை நடத்தி திரும்ப பெற்றது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

சென்னை: சென்னையில் கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 9000 கோடி ரூபாயை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி திரும்பப் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்து, வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில், ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் கடந்த 9ம் தேதியன்று திடீரென்று 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அவரது வங்கிக் கணக்கில், இருந்தது வெறும் 15 ரூபாய் தான். 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தனது செல்போனுக்கு வந்துள்ள குறுஞ்செய்தி, நண்பர்கள் யாரோ அனுப்பியுள்ளதாக அவர் நினைத்துள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் இருந்து 21,000 ரூபாயை நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் நண்பருக்கு சென்றதைத் தொடர்ந்து, தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையிலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டுள்ளனர். ராஜ்குமாரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தவறுதலாக அனுப்பிய தொகையை செலவு செய்ய வேண்டாம் என்று வங்கி தரப்பில் ராஜ்குமாருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மத்தியில், வங்கி மற்றும் ராஜ்குமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வங்கித் தரப்பு வழக்கறிஞர்கள் நடந்த சம்பவத்தை விளக்கி, ராஜ்குமார் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றனர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு இந்த தொகையை அனுப்பும் பணியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில்தான், தவறுதலாக கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9000 கோடியை செலுத்தியுள்ளனர். மேலும், ராஜ்குமார் நண்பருக்கு அனுப்பி செலவழித்த 21,000 ரூபாயை அவருக்கு கடனாக வழங்கிவிடுவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. கார் ஓட்டுநர் கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் அந்த தொகையை வங்கி நிர்வாகம் பெற்றுக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x