Last Updated : 20 Sep, 2023 09:37 PM

 

Published : 20 Sep 2023 09:37 PM
Last Updated : 20 Sep 2023 09:37 PM

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆண்டு தோறும் குறுவை, சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ஏக்கருக்கு 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். எனவே குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிடுகையில், 12 மாநிலங்களில் குறுவை பயிர் காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை என்றார்.

மத்திய அரசு சார்பில், தமிழகம் பாதிப்பை சந்திக்கும் மாநிலத்தில் ஒன்றாகும். இதனால் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறுவை பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில், குறுவை பருவத்தில் 27 சதவீதம் மட்டுமே சாகுபடி நடைபெறும். இதில் குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும் குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது/ இதையடுத்து குறுவை பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x