Published : 20 Sep 2023 02:35 PM
Last Updated : 20 Sep 2023 02:35 PM

ஆளுநர் ரவியை நீக்கக் கோரும் 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் அளித்ததாக வைகோ தகவல்

தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உடன் எம்.பி.கணேசமூர்த்தி

புதுடெல்லி: தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் 57 எம்பி.க்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

அவற்றை அட்டைப் பெட்டிகளில் வைத்து, ரயிலில் கொண்டுவந்து, புதன்கிழமை (செப்.20) பகல் 12 மணி அளவில் நானும், கணேசமூர்த்தி எம்பியும் குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் ஒப்படைத்தோம். எங்கள் கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும், அவர் தருகின்ற பதிலை உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம் என்றும் அவர்கள் உறுதி கூறினார்கள்.

கையெழுத்திட்ட அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு தரப்பில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு மாத காலம் இதற்காகப் பாடுபட்ட மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x