Published : 16 Sep 2023 06:54 PM
Last Updated : 16 Sep 2023 06:54 PM

மின் கட்டண உயர்வுக்கு எதிராக செப்.25-ல் கதவடைப்பு: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு

மதுரையில் இன்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, மடீட்சியா சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர். | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: ஒரு யூனிட்டுக்கு 430 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இம்மாதம் 25-ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மதுரையில் இன்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்.குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசைத் தொழில்களுக்கு 3ஏ பிரிவில் வழங்கச்சொல்லியும், தற்போது 3பி பிரிவில் வழங்குவதால் 500 யூனிட்டுக்கு ரூ.2062 கூடுதலாகிறது. 112 கிலோவாட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக்கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.35 ஆக இருந்தது. தற்போதைய மின்கட்டண உயர்வால் 430 சதவீதம் அதிகரித்து ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் எனவும் அதற்கேற்றவாறு கட்டண செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், எவ்வித காரணமின்றியும் தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. மேலும், காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாக செலுத்தச் சொல்லியுள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தொழில்கள் அழியும் நிலையிலுள்ளது. தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் தமிழக முதல்வர், தமிழகத்திலுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும். மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 25-ல் கதவடைப்பு போராட்டம் நடத்தி உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம். இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழில் நிறுவனங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் போராட்டமாகும்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x