Published : 15 Sep 2023 07:53 AM
Last Updated : 15 Sep 2023 07:53 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தனபால்.

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த தனபால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குதொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவரை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில்ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, தனபால் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜரானார். கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரித்தனர்.

அவர் தெரிவித்த பதில்களை போலீஸார் வீடியோவாகவும் பதிவு செய்தனர். விசாரணை நேற்று மாலை வரை நடந்தது.

முன்னதாக விசாரணைக்கு ஆஜராக வந்த தனபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோடநாடு சம்பவத்தில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, என்ன நடந்தது என எனது சகோதரர் கனகராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார். அதை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்கிறேன். கோடநாடு வழக்கில் காவல்துறையை சேர்ந்த நபர்கள், அரசியல் பிரமுகர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

கோடநாடு சம்பவத்துக்கு பிறகுஎனது தம்பியிடம் பேரம் பேசியபடி எதிர் தரப்பினர் பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது எனது தம்பியை தாக்கியுள்ளனர். எனது சகோதரரை கொல்ல 2 முறை முயற்சி நடந்தது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் உயிரிழந்துள்ளார். கனகராஜ் எடுத்துவந்த 5 பைகளில் 3 பைகளை சங்ககிரியிலும், 2 பைகளை ஆத்தூரிலும் ஒப்படைத்துள்ளார். இதை வெளியில் கூறுவதால் என் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக முன்னரே என்னிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளையும் தற்போது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்ர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x