Last Updated : 15 Sep, 2023 12:16 AM

 

Published : 15 Sep 2023 12:16 AM
Last Updated : 15 Sep 2023 12:16 AM

திருச்செந்தூர் கோயில் பயிற்சி அர்ச்சகர் நியமன வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு 

திருச்செந்தூர் கோயில் | படம்: எல்லுச்சாமி கார்த்திக்

மதுரை: திருச்செந்தூர் கோயில் பயிற்சி அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, இணை செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலர் 28.8.2023-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூரில் ஆகம விதிகளை முழுமையாக பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள் உள்ளனர். இதனால் புதிய அர்ச்சகர்கள் நியமனம் தேவையற்றது. அரசின் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை முழுமையாக கற்க 5, 6 ஆண்டுகள் ஆகும். எனவே அரசாணை மற்றும் செயல் அலுவலரின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை அரசாணை, அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், பயிற்சி அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆகமம், வேதம் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஒரு ஆண்டுக்கு பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் மூத்த அர்ச்சகர்களிடம் பயிற்சி பெறுவர். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் திரிசுதந்திரர்கள் வேலையில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர். அதற்கு வேலைவாய்ப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இங்கு வழக்கு தொடர முடியாது.

தனிப்பட்ட முறையில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தெடார உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மனுதாரர்களைப் போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அறிவிப்பாணையின் ஆகம விதிகள் மீறல் இல்லை. நிரந்தர அர்ச்சகர் நியமனம் செய்தால் மட்டுமே வழக்கு தொடர முடியும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், அரசின் உத்தரவில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர்களுக்கு கோயில் பணத்தில் எப்படி சம்பளம் வழங்க முடியும் என்றனர். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x