Published : 11 Sep 2023 02:45 PM
Last Updated : 11 Sep 2023 02:45 PM

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், "தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதல்வர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் தண்டிக்க வேண்டும்" என புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தனது புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வராக இருந்த பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணையின் அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று வாய்மொழி தகவலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்தப் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் 2018-ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகான முடியாது. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளது எனக் கூறி, ஆர்.எஸ்.பாரதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்படுள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x