Published : 07 Sep 2023 04:52 AM
Last Updated : 07 Sep 2023 04:52 AM

குறுவை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் பல்வேறுஇடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்கள் கருகிவருகின்றன. மேலும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகஅரசு தர மறுப்பதால், குறுவையைகாப்பாற்ற முடியாமலும், சம்பாசாகுபடியை தொடங்க முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கருகும்குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி, திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்க்கரை துறை கூடுதல்ஆணையர் த.அன்பழகன், நாகை மாவட்டத்தில் வேளாண்மைவிற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன் ஆகியோர் குறுவைபயிர்களின் நிலை குறித்து நேற்றுஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அரசிடம் அறிக்கை தாக்கல்: ஆய்வின்போது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து அரசிடம் இன்று (செப். 7)அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி சேதம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தஉள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,துறை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

டெல்டா மாவட்டத்தில் ஆய்வுகளை தீவிரப்படுத்துவது, ஏக்கருக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை பற்றி இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x