Published : 04 Sep 2023 09:44 AM
Last Updated : 04 Sep 2023 09:44 AM

பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்தியைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப் படம்.

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும் என்றே பேசியதாகவும் ஆனால் அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் பேசுகையில், "நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். அதனை நான் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். எப்போதும் வலியுறுத்துவேன்.

ஆனால் சிலர் சிறுபிள்ளைத்தனமாக நான் இந்துக்கள் அழிப்பை ஊக்குவித்ததாகப் பேசுகின்றனர். திராவிடம் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்கள் திமுகவினர் கொல்லப்பட வேண்டும் என்று கொல்கிறார்களா? பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத பாரதம் எனக் கூறுகிறாரே. அப்படியென்றால் அதற்கு காங்கிரச்காரர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது அர்த்தமா?

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமூகத்தில் எதுவுமே மாறாமல் எல்லாமே அப்படியே இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக என வலியுறுத்துகிறது. மாறாக திராவிட மாடல் மாற்றத்தையும், சமூக சமத்துவத்தை வளர்க்கிறது. பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்திகளைப் பரப்புகிறது. அது அவர்களின் வழக்கமான செயல்பாடுதான். அவர்கள் என்ன மாதிரியான வழக்குகள் தொடுத்தாலும் நான் அத்தனையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இண்டியா கூட்டணியைக் கண்டு பாஜகவுக்கு பயம். அதனால் தான் அவர்கள் திசைதிருப்பும் முயற்சியாக இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதே திமுகவின் கொள்கை" என்றார்.

உதயநிதி மீது வழக்கு: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வினித் ஜிண்டால். இவர் டெல்லி போலீஸில் உதயநிதிக்கு எதிராக அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுகள், ஆத்திரமூட்டும் வகையிலும், எரிச்சலூட்டும் வகையிலும், இழிவான மற்றும் தூண்டிவிடும் வகையிலும் உள்ளது. அவருடைய பேச்சு சனாதனத்துக்கு எதிராக உள்ளது. ஒருஇந்துவாகவும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவனாகவும் உள்ள எனது மத உணர்வுகள் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் புண்படுத்தப்பட்டுள்ளன.

சனாதன தர்மத்தை ஒழிப்பதாக அவர் பேசியுள்ளார். அத்துடன் சனாதன தர்மத்தை டெங்கு, கரோனா, மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சனாதனதர்மத்துக்கு எதிரான வெறுப்புணர்வே உதயநிதியின் பேச்சில் வெளிப்படுகிறது. அவர் எம்எல்ஏ.வாகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்றுவேன் என்று அவர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். அவர் அனைத்து மதங்களையும் கட்டாயம் மதிக்க வேண்டும். ஆனால், உள்நோக்கத்துடன் அவர்ஆத்திரமூட்டும் வகையிலும் மக்களை தூண்டி விடும் வகையிலும் பேசியிருக்கிறார். மதத்தின் பெயரால் மக்களிடையே மோதல் ஏற்படும் வகையிலும், பகை ஏற்படும் வகையிலும் பேசியிருக்கிறார்.

‘சனாதன தர்மாவை எதிர்க்க கூடாது. கரோனா, டெங்கு, மலேரியாவை போல் அதை ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியிருப்பது இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்வதற்கு தூண்டிவிடுவது போல் உள்ளது. இது 153ஏ மற்றும் பி, 295ஏ, 298 மற்றும் 505 ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகும். எனவே, உதயநிதி மீது மேற்கூறிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் வினித் ஜிண்டால் கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x