Published : 04 Sep 2023 05:54 AM
Last Updated : 04 Sep 2023 05:54 AM

மோடியை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தினால் நான் போட்டியில்லை: சீமான் உறுதி

கோவை: தமிழகத்தில் நரேந்திர மோடி போட்டியிட்டு அவரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தினால், நான் அங்கு போட்டியிட மாட்டேன்’’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல கலந்தாய்வு கூட்டம் சீமான் தலைமையில் கோவையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை. அண்ணாமலை தனித்து நின்று வெற்றி பெறட்டும். ஏன் கூட்டணி வைத்துள்ளார்? அண்ணாமலை தான் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறார். வயிறு காய்ந்து இருக்கும்போது வானில் சந்திரயான் எதற்கு? இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் உள்ளனர். அவர்களுக்கு பசியாற்ற வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக, அதிமுக இடையே நடப்பது பங்காளி சண்டை. இதில் பாஜக ஏன் தலையிடுகிறது? தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. சாதி, மத உணர்வு சாகும்போது தமிழ் இனம் தானாக வளரும். மொழிப் பற்று, இனப் பற்று வரும்போது சாதிப் பற்று மறைந்துவிடும்.

விஜயலட்சுமி புகார் குறித்து.. நடிகை விஜயலட்சுமி யார், அன்னை தெரசாவா? எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்திருந்தால் புகைப்படத்தை வெளியிட வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன்பு பிரச்சினை ஏற்படுத்துகிறார். தமிழகத்தில் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக போட்டியிட்டால் நான் அங்கு வேட்பாளராக நிற்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x