Published : 03 Sep 2023 04:32 PM
Last Updated : 03 Sep 2023 04:32 PM

7பி, 22பி, 23சி, 47டி, எல்70 எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு... - பேருந்து சேவை குறைப்பால் கொரட்டூர் மக்கள் ஆதங்கம்

கொரட்டூர் பேருந்து நிலையம் படம்: ம.பிரபு

சென்னை: சென்னையின் முக்கிய பகுதியான கொரட்டூர் மக்களின் போக்குவரத்து தேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் நிறைவேற்றி வருகிறது. ஆனால் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பெரும்பாலான பேருந்துகளின் சேவை தற்போது நிறுத்தப் பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் கூறியதாவது: கொரட்டூரில் இருந்து நல்ல முறையில் இயங்கி வந்த பல பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 7பி, 22பி, 23சி, 47டி, எல்70என 5 நகரப் பேருந்துகளுக்கு மக்களிடம்எப்போதும் வரவேற்பு இருக்கும். இவை கரோனாவுக்குப் பிறகு நிறுத்தப்பட்டன. இவற்றில் சில பேருந்துகள் மட்டும் பெயரளவுக்கு இயங்குகின்றன.

போதிய பேருந்துகள் இல்லாததால் முதியவர்கள் ஷேர் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு போக ஒரு பேருந்துகூட இல்லை. பூந்தமல்லிக்கு இயக்கப்பட்ட 63 சி என்ற வழித்தட எண்கொண்ட பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன. வில்லிவாக்கத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

புரசைவாக்கத்துக்குச் செல்ல பேருந்துகள் இல்லை. இதில் பெரும்பாலான பேருந்துகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு, கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டவை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையமும் பயன்படாமல் வீணாகக்கிடக்கிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம், முதல்வரின் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களில் புகாரளித்தும் பலனளிக்கவில்லை. மக்களின் நலன் கருதி போதியபேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பயணி மோகன் கூறும்போது, "கழிப்பறையில் மின் விளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் பயன்படுத்த சிரமமாக இருக்கிறது. குடிநீர் வசதி முற்றிலுமாக இல்லை. பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: கொரட்டூரில் போதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 7பி பேருந்து 35சி என்ற வழித்தட எண்ணாக மாற்றம் செய்யப்பட்டு பிராட்வே வரை இயங்கி வருகிறது. அம்பத்தூர்- தாம்பரம் இடையே எல் 70 என்ற வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரவாயலுக்குச் சென்று திரும்பும் வகையில் எஸ் 42 வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அம்பத்தூர் – பட்டரவாக்கம் இடையே எஸ் 75 வழித் தடத்தில் கொரட்டூர் வந்து செல்லும் வகையில் 5 பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்ற மினி பேருந்துகள் அதிகளவு இயக்கப் படுகின்றன.

அதேபோல் 47 டி வழித்தடத்தில் தியாகராய நகருக்கு 1 பேருந்து இயக்கப்படுகிறது. மந்தைவெளி அம்பத்தூர் ஓடி இடையே 41 டி வழித் தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெகு சில பேருந்துகள் மட்டுமே வருவாய் குறைவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும், அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வழியில் செல்லும் வகையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. எனவே, பேருந்து நிலைய மேம்பாடு தொடர்பாக மாநகராட்சியே முடிவெடுக்க வேண்டும். குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேருந்து நிலைய மேம்பாடு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "பேருந்து நிலைய மேம்பாடு தொடர்பாக இதுவரை திட்டம் ஏதும் இல்லை. வரும் காலங்களில் கோரிக்கை வரும் பட்சத்தில் அரசின்அறிவுறுத்தலுக்கு இணங்க மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் போன்றவற்றுடன் இணைந்துநடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x