Published : 02 Sep 2023 07:27 AM
Last Updated : 02 Sep 2023 07:27 AM

தமிழகத்தை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றம்

ஸ்.கிருஷ்ணன், நீரஜ் மிட்டல்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், 1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களின் ஆட்சியர், பாடநூல் கழக மேலாண் இயக்குநர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், தமிழக அரசின் 5-வது மாநில நிதிக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இடையே மத்திய அரசுப்பணிக்கு சென்ற இவர், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் தனி செயலராக பணியாற்றியுள்ளார். மத்தியில் இருந்து தமிழக அரசுப் பணிக்கு மாறிய பிறகு, தமிழக நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு தற்போது அவர் தமிழக தொழில்துறை செயலராக பணியாற்றி வந்தார். மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அல்கேஷ்குமார் சர்மா ஓய்வைத் தொடர்ந்து, தற்போது அப்பதவியில் எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு கிருஷ்ணன் சென்றுள்ளார்.

அதேபோல், 1992-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான நீரஜ் மிட்டல், மத்திய தகவல் தொடர்புத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நீரஜ் மிட்டல், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி முதல், தமிழ்நாடு நகர்ப்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குமுன்பு, மத்திய அரசுப் பணியில் எண்ணெய், இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் இணை செயலராகப் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x