Last Updated : 02 Sep, 2023 04:29 AM

 

Published : 02 Sep 2023 04:29 AM
Last Updated : 02 Sep 2023 04:29 AM

மேட்டூர் | மழைக்கு ஒதுங்கிய போது குடிசை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

மேட்டூர் அடுத்த கொளத்தூரில் பலத்த காற்று வீசியதில் இடிந்து விழுந்த குடிசை.

மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூரில் மழைக்கு ஒதுங்கிய போது பலத்த காற்று வீசியதில் குடிசை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 5 பேருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (62). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் மிளகாய் செடி பயிரிட்டுள்ளார். இவரது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் அறுவடை பணிக்காக சத்யா நகர் கீழ் காலனியை சேர்ந்த 12 பெண்கள் நேற்று சென்றனர். அப்போது, மதியம் சுமார் 3.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழைக்கு ஒதுங்குவதற்காக தோட்டத்தின் ஓரத்தில் உள்ள குடிசையில் ஒதுங்கினர்.

அப்போது, பலத்த காற்று வீசியதால் குடிசையில் இடிந்து விழுந்ததில், 12 பெண்கள் பயந்து கூச்சலிட்டனர். அவர்களின் கதறலை கேட்டு, தோட்டத்தின் அருகில் இருந்த வேலையாட்கள் ஓடி வந்து அனைவரையும் காப்பாற்றி, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிசை அழுத்தியதில் படுகாயமடைந்த சுமதி (55) என்ற பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாதம்மாள் (65) என்ற பெண் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த லட்சுமி (55), ராணி(50), கலாமணி(39), சாலமா(55) ஆகியோர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த பெண்கள் குடிசை இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் (பொ) சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டவில்லை, குடிசைக்கும் மின் இணைப்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பெண் பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x