Published : 01 Sep 2023 07:01 PM
Last Updated : 01 Sep 2023 07:01 PM

மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ய நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொடங்கிய சாகர் பரிக்ரமா கடலோரப் பயணத்தில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவக் கிராமத்தில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் மீனவ மக்களிடையே இன்று கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமங்களை ஒருங்கிணைத்து உவரியில் மீன்பிடித் துறைமுகம், ஆழ்கடல் மீன்பிடி வசதி, படகுகள் பாதுகாப்பு, இணைப்புச் சாலையுடன் கூடிய சாலை வசதி, பரத இனத்தைச் சேர்ந்த மீனவர்களை பழங்குடியினர் இனத்தில் சேர்க்க வேண்டும், மீனவர்களுக்கென ப்ரத்யேக வங்கி வசதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் மனுக்களை அளித்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், "நடப்பு நிதியாண்டில் துறைமுகங்கள் மேம்பாடு, மீன்பிடி இறங்கு தளம், மீன் பதப்படுத்தும் வசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் நம் நாட்டின் எல்லையைக் காப்பவர்கள். அவர்கள் தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகின்றனர். எனவே அனைவரும் இணைந்து, அனைவரும் முயன்று, அனைவரின் வளர்ச்சிக்கும் நாம் பாடுபட வேண்டும்" என்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, "மீனவர்களின் நலனுக்காக, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதன் முறையாக மீன்வளத்துறையை உருவாக்கினார் பிரதமர் மோடி. நான் நாடு முழுவதும் மீனவக் கிராமங்களுக்குச் சென்று மீனவர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். ஆனால் இந்த கிராமத்தில் தான், மீன்வளம் என்ற நமது துறையை மீனவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்.

இதுவரை வேளாண் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கடன் அட்டைகள், பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிரதமர் மோடி, மீனவர் நலனில் எந்தளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிப்படுகிறது. வருடத்திற்கு 7 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுட்டுள்ளது. இதில் முறையாக குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தும் மீனவர்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

எனவே நீங்கள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உங்களுக்கு நேரடியாக உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்திற்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆழ்கடல் மீன்பிடி, பதப்படுத்தும் வசதி, மீன்பிடி இறங்கு தளம் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மீனவர்களுக்கான கடன் அட்டைகளை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை இணைச் செயலாளர் நீத்து பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பாரம்பரிய களியல் நடனத்தை அப்பகுதி மீனவர்கள் ஆடினர். இந்த நடனத்தை மத்திய அமைச்சர்கள் கண்டு களித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x