Published : 01 Sep 2023 07:36 AM
Last Updated : 01 Sep 2023 07:36 AM

குமரி கடலில் வீசிய சூறைக்காற்றால் கரைதிரும்புவதில் சிக்கல் - 2 மணி நேரம் தவித்த மத்திய அமைச்சர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக் காற்றால் நடுக்கடலில் தவித்த நிலையில், மீனவர்களின் விசைப்படகு மூலம் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, எல்.முருகன் ஆகியோர் கரைதிரும்பினர்.

நாகர்கோவில்: சூறைக்காற்றால் கரைக்கு திரும்ப முடியாமல் கன்னியாகுமரி மாவட்ட கடலில் மத்திய அமைச்சர்கள் தவித்தனர்.

இந்திய கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடலோர யாத்திரை மத்திய அரசு சார்பில் நடந்துவருகிறது.

குஜராத்தில் தொடங்கிய யாத்திரை கடல்வழியாக நேற்று காலை கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தை வந்தடைந்தது. யாத்திரை குழுவில் மத்திய மீன்வளத் துறை
அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான நவீன படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்துக்கு யாத்திரை குழுவினர் புறப்பட்டனர். மத்திய அமைச்சர்களை கரைக்கு அழைத்துவர தேங்காய்
பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவ பிரதிநிதிகள் சென்றனர்.

துறைமுகம் அருகே ஒருநாட்டிக்கல் மைல் தொலைவில் யாத்திரை குழுவினர் கடற்படை படகில் வந்தபோது, சூறைக்காற்று பலமாக வீசியது. இதனால் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிகாரிகள், கடற்படை படகில் இருந்து கரைக்கு அழைத்துவரச் சென்ற விசைப்படகில் ஏற முடியாமல் தவித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடற்படை படகிலேயே அர்ந்திருந்தனர். காலை 11 மணிக்கு பின்னர் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதன் பின்னர் மீனவ பிரதிநிதிகள் சென்ற விசைப்படகில் ஏறி தேங்காய்பட்டினம் துறைமுக பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் வந்தனர்.

பிறகு,தேங்காய்பட்டினத்தில் மீனவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடினர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர். குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்திலும் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x