Published : 31 Aug 2023 06:55 AM
Last Updated : 31 Aug 2023 06:55 AM

கோடநாடு வழக்கில் அவதூறு பரப்புகிறார்கள் - மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், கட்சி நிர்வாகிகள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கூட்டணியில் இருந்தாலும் காவிரி உள்ளிட்ட பிரச்சினைகள் வந்தபோது தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டினோம் என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோடநாடு வழக்கில் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மதுரையில் ஆக.20-ம் தேதி அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடந்தது. மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று மதுரை வந்தார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப அணி மண்டலச் செயலாளர் ராஜ்சத்யன், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோருடன் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு வழக்கில் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை நான் சட்டப்பேரவையிலும் பேசி உள்ளேன். குற்றவாளியை கைது செய்தது அதிமுகதான். இந்தக் குற்றவாளிகள் ஏற்கெனவே கேரளாவில் கொடும் குற்றம் புரிந்தவர்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஏன் திமுகவினர் ஜாமீன் வாங்க வேண்டும்.

கரோனாவால்தான் இந்த வழக்கு தாமதமானது. வழக்கு 90 சதவீதம் முடிந்ததாக தகவல். வேறு வழி இல்லாமல் எங்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இதை அடிக்கடி வெளியிடுகிறார்கள். நாங்கள் பதறவில்லை.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை நாங்கள் பெற்றோம். விவசாயிகளுக்காக 22 நாட்கள் அதிமுக எம்பி.க்கள் மக்களவையை முடக்கினர். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருந்தாலும் பிரச்சினைகள் வந்தபோது தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டினோம்.

அதிமுக எந்தக் கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது. திமுகதான் அடிமையாக இருக்கும் கட்சி. திமுகவில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கு வர வேண்டும். மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களுக்காக, விவசாயிகளுக்காக நீரைப் பெற்றுக் கொடுத்திருந்தால் பாராட்டி இருப்பார்கள். முதல்வர், நானும் டெல்டாகாரன் என்று கூறினார். ஆனால், நெல் பயிர்கள் கருகியதற்கு என்ன தீர்வு கண்டார். தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்?

2010-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் நீட் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 27 மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடம் எதிர்ப்பு வந்ததால் உரிமைத்தொகை வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பின் ஒரு பேச்சு. உயர்த்திய மின் கட்டணம். பத்திர பதிவுக் கட்டணத்தை குறைப்பதோடு, 40 சதவீதம் உயர்ந்துள்ள விலைவாசியையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x