Last Updated : 28 Aug, 2023 10:03 PM

 

Published : 28 Aug 2023 10:03 PM
Last Updated : 28 Aug 2023 10:03 PM

மத்தியில் இன்னும் 6 மாதங்களில் ஆட்சி மாற்றம்: கி.வீரமணி நம்பிக்கை

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அருகில் தி.க.தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி, எம்எல்ஏ மதியழகன், பிரகாஷ்.

கிருஷ்ணகிரி: இன்னும் 6 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது என கிருஷ்ணகிரியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் திறப்பு விழா, தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தி.க. தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அறிவரசன் வரவேற்றார். இதில், தி.க. தலைவர் கி.வீரமணி, பெரிய மய்யத்தை திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முப்பெரும் விழாவினை திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் தி.க தலைவர் கி.வீரமணி பேசியதாவது: திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என பேரறிஞர் அண்ணாவும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என முன்னாள் முதல்வர் கருணாநிதியும் என கூறினர். இன்றைய தினம் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நாள். அவருக்கு வாழ்த்துக்களை நானும், என்னுடன் இருந்த அமைச்சர்களும் கூறினோம்
கருணாநிதி மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார்கள். ஆனால் எவ்வித வெற்றிடமும் ஏற்படவில்லை. மாறாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே கற்றிடமாக தமிழகத்தை மாற்றி உள்ளார்.

இது மக்களுக்கான ஆட்சி, கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தருகிற ஆட்சியாக திகழ்கிறது. இங்கு கூட சிலை திறக்க பல்வேறு இடர்பாடுகள் வந்தன. ஆனால், முதலமைச்சர் ஒற்றை கையெழுத்தில் இங்கு இந்த விழா நடைபெற ஏற்பாடுகளை செய்துள்ளார்.
மத்திய அரசு குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. அதன் மூலம் தந்தையின் தொழிலையே மகனும் பின்பற்ற ஊக்குவிக்கிறது. இதனால் ஏழை மக்களின் குழந்தைகள் மருத்துவர்கள், கலெக்டர்கள், ஐபிஎஸ் அலுவலர்கள் ஆகலாம் என்கிற கனவை தகர்க்கிறார்கள்.

பாஜக இந்தியாவை விட்டு விரட்டபட வேண்டிய கட்சி. இன்னும் 6 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. குலக்கல்வி திட்டத்தை தி.க கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தலைவர் கலைஞர் வழியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எடுத்த காரியத்தை முடிப்பவர். தந்தை பெரியார் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை. இன்று பலரும் தங்களின் படிப்பை பெருமையாக கூறி கொள்கிறார்கள். அவர்கள் படிக்க காரணம் பெரியார். இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர் பெரியார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்று, அவர் வழியில் ஆட்சி நடத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர்கள் 3 பேரின் கொள்கைகளை ஏற்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ , திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி.சி.ஆர். தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x