Last Updated : 28 Aug, 2023 04:37 PM

 

Published : 28 Aug 2023 04:37 PM
Last Updated : 28 Aug 2023 04:37 PM

உரிகம் அருகே அடிப்படை வசதியில்லாததால் கர்நாடக மாநிலத்துக்கு 40% மக்கள் இடம் பெயர்வு

அடிப்படை வசதியில்லாததால், பலரும் வெளியூர் சென்ற நிலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் ஈரான் தொட்டி மலைக் கிராமம்

ஓசூர்: உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈரான் தொட்டி மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 40 சதவீதம் மக்கள் ஊரை காலி செய்து விட்டு, கர்நாடக மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈரான் தொட்டி மலைக் கிராமத்தில் 50 குடியிருப்புகளில் 900-க்கும் மேற்பட்ட மகள் வசித்து வந்தனர். இங்குள்ளவர்களின் பிரதானத் தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது.

வானம் பார்த்த மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்வதால், மழையை நம்பியே சாகுபடி பணிகள் நடைபெற வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமத்தினர் 40 சதவீதம் பேர் வீடு, நிலங்களை விட்டு, விட்டு கர்நாடக மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மாதன் என்பவர் கூறியதாவது: தமிழக எல்லைப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஈரான் தொட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் வர 4 நாட்கள் ஆகிவிடும். தெரு விளக்குகள் சரியாக எரியாததால், குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்துவிடும்.

இதனால், மாலை 6 மணிக்குள் வீட்டுக்குள் முடங்கும் நிலையுள்ளது. ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி வைத்தனர். அது பழுதாகி தண்ணீர் வருவதில்லை. பழமையான கிணற்று நீரைக் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.இங்கிருந்து 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.

குடிநீர் வசதிக்கு வழியில்லாததால், பழமையான கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்கள்.

மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. அடிப்படை வசதி மற்றும் வருவாய்க்கு வழியில்லாததால் பல ஆண்டுகளாக வாழ்ந்த பலர் ஊரை காலி செய்து, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர்.

எனவே, எங்கள் கிராமத்தில் சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x