Published : 28 Aug 2023 05:40 AM
Last Updated : 28 Aug 2023 05:40 AM

சிஏஜி அறிக்கையால் அம்பலம்... மத்திய அரசின் 7 திட்டங்களில் முறைகேடு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: மத்திய பாஜக அரசின் ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் அடுத்த பவித்திரமாணிக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.நாகை எம்.செல்வராஜ் இல்லத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது:

கடந்த 9 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் தற்போது வெளியிட்டு, பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 99999 99999 என்ற போலியான செல்போன் எண் மூலம் 7.50 லட்சம் பயனாளிகளை முறைகேடாக சேர்த்துள்ளனர். தகுதி இல்லாத குடும்பங்கள் சேர்க்கப்பட்டு ரூ.22.44 கோடி மோசடி நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களில் 88,760 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், அதன்பின்னரும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

துவாரகா சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ் ஒரு கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் செலவான ரூ.18 கோடியை ரூ.250 கோடியாக அதிகரித்துள்ளனர். பாரத் மாலா திட்டத்தில் சாலை அமைக்க நிர்ணயம் செய்ததைவிட 2 மடங்கு நிதி அதிகம் வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியா மேம்பாட்டு திட்டத்தில்அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்ததில் ரூ.137 கோடி முறைகேடு நடந்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் விமான இயந்திரம் வடிவமைக்கும் திட்டத்தில் ரூ.159 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் ஓய்வூதிய திட்ட நிதியை மத்திய அரசு தனது விளம்பரத்துக்கு முறைகேடாக பயன்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சியில் மொத்தமாக ரூ.7.50 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. எனவே, ஊழல் குறித்து பேசும் தகுதி பாஜகவுக்கு இல்லை.

மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கைப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீது 1.15 லட்சம் புகார்கள் உள்ளன.இதில் 44 ஆயிரம் புகார்கள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீது பதிவாகியுள்ளன. இத்தகைய ஊழல் பின்னணியை வைத்துக்கொண்டுதான், இவர்கள் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். இவர்களது ஊழலை மறைக்கவே திமுக மீது அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறையை விட்டு மிரட்டிப் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் திமுகவோ, இண்டியாகூட்டணியோ அஞ்சாது. இனியும் இந்தியாவை ஏமாற்ற முடியாது என்பதை, வரப்போகும் மக்களவை தேர்தல் உணர்த்தும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x