Published : 26 Aug 2023 10:13 PM
Last Updated : 26 Aug 2023 10:13 PM
கடலூர்: மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழு தோல்வியே காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.26) மதியம் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மதுரையில் இன்று (ஆக.26) நடைபெற்ற ரயில்வே விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கேஸ் சிலிண்டர்களோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியா நெடுக பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு விபத்தில் சேதம் இருந்திருக்கும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழுக்காரணம். ரயில்வே பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும்.
10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பப்பட வேண்டும். சமர்பன் ரயிலில் பெண்களுக்கான பெட்டிகளில் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்பதற்காக பொது பெட்டிகளின் நடுவில் பெண்களுக்கான பெட்டிகளை இணைக்கிறோம் என்று ரயில்வே அதிகாரி அறிக்கை விட்டார். அவ்வளவு பாதுகாப்பு படையினர் இடங்கள் காலியாக உள்ளன. போதிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் இல்லை. கொள்கையும் இல்லை, சுற்றுலா பயணிகள் பயணிக்கின்ற பெட்டிகளை பாதுகாப்பு சோதனைகள் இடுவது சம்பந்தமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. அதேபோல் ரயில் பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவி, ஏசி பெட்டிகளுக்கு மட்டுமே உள்ளது. ஏசி அல்லாத பெட்டிகளில் தீயணைப்பு கருவிகள் இல்லை. சுற்றுலா பயணிகளில் கம்பார்ட்மெண்டில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். ரயில்வே நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கு கடைப்பிடித்து வருகிறது.
சமீபத்தில் இரு பெரும் விபத்துக்களை சந்தித்து விட்டது. இருசக்கர வாகனத்தை ரயில் பெட்டியில் பார்சல் அனுப்ப வேண்டும் என்றாலே அந்த வாகனத்தில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் இருந்தால்தான் பார்சலுக்கே அனுமதிப்பார்கள். ஆனால், 10 நாட்கள் கேஸ் சிலிண்டரோடு தீ பிடிக்கும் பொருட்களோடு பாதி இந்தியாவை பல்வேறு ரயில் நிலையங்களின் வழியாக இந்த ரயில் கடந்து வந்துள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை பார்வையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பார்வையிட்டோம். தென்னக ரயில்வேயில் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ஒன்று. திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. ரயில் நிலையத்திற்கு வந்து போகின்ற ரயில்கள், நின்று செல்கின்ற ரயில்கள், கூடுதல் ரயில்கள் சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் கொடுத்துள்ளனர். அனைத்தும் ரயில்வே போர்டு எடுக்க வேண்டிய முடிவுகள்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரயில்வே போர்டிடம் வலியுறுத்துவேன். திருப்பாதிரிப்புலியூர் என்பதற்கு பதிலாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே துறை அதிகாரியிடம், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவாக அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாநகர செயலாளர் அமர்நாத், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment