Published : 25 Aug 2023 06:20 AM
Last Updated : 25 Aug 2023 06:20 AM

ஆக.27 முதல் வேளச்சேரி - கடற்கரை ரயில் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: கடற்கரை - எழும்பூர் வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் நடைபெறவுள்ளதால், பறக்கும் ரயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை ஆக.27-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. 7 மாதங்களுக்கு மின்சார ரயில் சேவை இருக்காது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சென்னை கடற்கரை-எழும்பூர் வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை ஆக.27-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. 7 மாதங்களுக்கு மின்சார ரயில் சேவை இருக்காது. அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை வழக்கம்போல இருக்கும்.

சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 3 பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளில் மின்சார ரயில் சேவையும், ஒரு பாதையில் மெயில், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ஒரு ரயில் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கமுடியாத நிலை உள்ளது.

எனவே, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் ஆக.27-ம்தேதி தொடங்கவுள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்படவுள்ளது. 7 மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை வழங்கப்பட்டது.

கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு, 80 மின்சார ரயில் சேவைமட்டும் வழங்கப்படும். திருவள்ளூர்-வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி- வேளச்சேரி ரயில்கள் சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும். கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சர்வீஸ்கள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x