Published : 24 Aug 2023 10:19 AM
Last Updated : 24 Aug 2023 10:19 AM

“அரசுப் பள்ளியில் படித்தேன்; ஆவரேஜ் மாணவன்தான். ஆனால்...” - சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் உத்வேகப் பகிர்வு

விஞ்ஞானி வீரமுத்துவேல் | படம் உதவி: சமூகவலைதளம்

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் தமிழகம் சற்றே கூடுதல் பெருமிதத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். "மாணவர்களே, சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு P. வீர முத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம் என்கிறார்" என்ற அறிமுகக் குறிப்புடன் அவர் அந்தக் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.

அதில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியிருப்பதாவது: ''எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பைக் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். பள்ளியில் படித்தவரை நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடன்ட் (சராசரி மாணவன்). அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் எனக்கிருந்ததில்லை. பெற்றோர், குடும்பம் தரப்பில் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) படிப்பில் சேர்ந்தேன்.

படிக்கும்போது இன்ஜினியரிங் மேலே எனக்கொரு விருப்பம் வந்தது. அதனால் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் பெற இயன்றது. மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன்.

அதேவேளையில் இந்த மதிப்பெண்ணுக்காக எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும்போது 100 சதவீத கவனத்துடன் நன்றாகப் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்தது. அதன் விளைவாக ஆர்இசி திருச்சி கல்லூரியில் எம்இ முதுநிலை படிப்பில் இணைந்தேன். இளநிலை போல் முதுநிலை படிப்பிலும் நன்றாகப் படித்தேன். 9.17 சிஜிபியுடன் முதுநிலை படிப்பை முடித்தேன்.

கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன். வேலை செய்துகொண்டிருந்த போதே ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டானது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில் டிசைன் விங் இன்ஜினியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து எனது கணவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் (திட்ட பொறியாளர்) பின்னர் ப்ராஜக்ட் மேனேஜராக (திட்ட மேலாளர்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் பணியாற்றியுள்ளேன். இருந்தும் நான் எனது ஆராய்ச்சிக் கனவைக் கைவிடவில்லை. அதற்காக சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன். வைப்ரேஷன் செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்ஸ் எனப்படும் தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகள் பேப்பர் பிரசன்டேஷன் செய்து வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன்.

இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளோம். சந்திரயான்-2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன்.

நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், 100 சதவீதம் ஈடுபாடு அதுவும் எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும். கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நன்றி'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x