Published : 23 Aug 2023 06:06 AM
Last Updated : 23 Aug 2023 06:06 AM

பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் அரசு தலையிடக் கூடாது: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து

சென்னை: பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் அரசு தலையிடக் கூடாது எனபொது பாடத்திட்ட விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுவிடுத்த அறிக்கை: நடப்பாண்டுமுதல் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்மூலமாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

அரசின் நடவடிக்கையானது, மாநிலத்தின் உயர்கல்வியில் உள்ள தரம், ஆராய்ச்சி போன்றவற்றின் மீதான சர்வாதிகாரப் போக்கு ஆகும். இதுமட்டுமின்றி, 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யாத வகையில் உருவாக்கப்பட்ட பொதுப்பாடத் திட்டத்தை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், உயர்கல்வி மன்றத்தின்முடிவுகள் அல்லது அரசின் பார்வையை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரி வாயிலாக செயல்படுத்தும் உரிமை மாநில உயர்கல்வி மன்றங்களுக்கு இல்லை. குறிப்பாக, கல்லூரிகளின் தன்னாட்சி அதிகாரம் மற்றும் உரிமையை பறிக்கும் செயலாகவே தன்னாட்சி கல்லூரிகளில் பொதுப்பாடத் திட்டத்தை திணிப்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.

பொதுப்பாட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அமைச்சரின் உத்தரவை பல்கலை.களின்பாதுகாவலராக இருக்கக்கூடிய துணைவேந்தர்கள் ஒருவர்கூடஎதிர்க்கவில்லை. பல்கலை.களின்நற்பெயரை காக்கும் விஷயத்தில் அவர்களுக்கு ‘இல்லை’ என்று கூற துணிவு இருக்க வேண்டும்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளின் தரம், மாணவர்களின், ஆசிரியர்களின் நலன் மட்டுமே துணைவேந்தர்களின் முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x