Published : 21 Aug 2023 03:38 PM
Last Updated : 21 Aug 2023 03:38 PM

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மதுரை மாநாடே அடித்தளம்: இபிஎஸ் நம்பிக்கை

மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: மதுரை மாநாட்டில் கிடைத்திட்ட வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வெற்றிக்கும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில், நம் இருபெரும் இதய தெய்வங்களின் நல்லாசியோடு, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் இமயம் தொட்டு குமரி வரையில், இதுபோல் பேரெழுச்சி இதுவரை கண்டதுண்டா என அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் பெருவெற்றி அடைந்திருக்கிறது என்பதை, கட்சியின் பொதுச் செயலாளர் என்கின்ற முறையில் நான் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியில், தொன்றுதொட்டு வந்த, அஞ்சாத நெஞ்சுறுதியோடு களம் வந்து நின்ற லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி இருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்தில், எப்படி அலை அலையாய் தொண்டர்கள் கூடி கொள்கை முழக்கமிடுவார்களோ, அதைப் போலவே எனது அன்பான அழைப்பினை ஏற்று கடல் அலை போல், அலை அலையாக ஆர்ப்பரித்து வந்து கலந்துகொண்ட கட்சித் தொண்டர்கள் கூட்டம், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நம்முடைய ராணுவ கட்டுக்கோப்பையும், விசுவாசத்தையும் காட்டி இருக்கிறது; தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்; தமிழக மக்களின் துயர் விரைவில் தீரும் என்ற அறைகூவலை நம் மாநாட்டின் வெற்றி உறுதிப்படுத்தி இருக்கிறது.

பேரறிஞர் அண்ணாவின் உருவத்தைத் தாங்கி நிற்கும் நம் கட்சிக் கொடி, எம்ஜிஆர் கண்ட கொடி, ஜெயலலிதாவால் இமயம் வரை வென்ற கொடி, மதுரை மண்ணில் லட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஜெயலலிதா கூறியது போல், அதிமுக இன்னும் பல நூறு ஆண்டு காலம் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் என்கின்ற உறுதியை பறைசாற்றி இருக்கிறது.

கட்சியின் மூன்றாம் தலைமுறை எழுச்சியைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிற தீய சக்திகளின் கூட்டம், காவல் துறையை வைத்து, கட்சி மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு துயரங்களைத் தந்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பி அட்டூழியம் செய்தனர். `கட்டற்றுப் பாய்கிற காவிரி வெள்ளத்தை சிட்டுக் குருவிகள் கூடி தடுக்கவா முடியும்”. மாநாட்டுக்கு வருகை தந்த தொண்டர்கள், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் ஆங்காங்கே காத்திருந்தும், 30 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தும், மகளிர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதைக் கண்டு எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.

திமுக அரசின் காவல் துறையான ஏவல் துறை, மாநாட்டுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. மாறாக, மாநாட்டுக்கு வருபவர்களை தடுக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அதேபோல், துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் தாண்டி, கடசித் தொண்டர்கள் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டது நமக்குக் கிடைத்திட்ட மாபெரும் வெற்றி. இந்த வரலாற்று வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும்; அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன.

``தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுகதான்’’ என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்கும் வகையில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் நம் இயக்கம் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? இந்திய அரசியல் வரலாற்றில் இன்னொரு கட்சி இப்படியொரு மாநாட்டை நடத்தியது உண்டா? என நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் பேராதரவோடு, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று நடத்திய முதல் மாநாட்டுக்கு, என்னுடைய அன்பான அழைப்பினை ஏற்று குடும்பம், குடும்பமாக, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அனைத்து இடையூறுகளையும் தாண்டி மாநாட்டுக்கு வந்து கலந்துகொண்டு கொள்கை முழக்கமிட்ட நிர்வாகிகளுக்கும், எனது ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளுக்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் ஆறத்தழுவி, அரவணைத்து எனது நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக, மாநாட்டில் கலந்துகொண்டு பேராதரவு நல்கிய பொதுமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திட்ட, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள்; கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கும்; கட்சி அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x