Published : 19 Aug 2023 06:58 PM
Last Updated : 19 Aug 2023 06:58 PM

‘அஞ்சலி மஹால்’ ஆன ‘அம்மா திருமண மண்டபம்’ - தனியார் ஏலம் எடுத்ததால் பெயர் மாற்றம் @ மதுரை

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் மதுரை அண்ணாநகரில் அதிமுக ஆட்சியில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட ‘அம்மா திருமண மண்டபம்’ தற்போது திமுக ஆட்சியில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் ‘அஞ்சலி மஹால்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரில் 3-வது குறுக்குத் தெருவில் இருந்த அரசு சமுதாயக் கூடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.5 கோடியில் கார் நிறுத்தும் வசதி, ஏ.சி அரங்குகள், லிப்ட் வசதிகள் என நவீன வசதிகளுடன் கட்டுமானப்பணி 2018 நவம்பரில் தொடங்கி 2019-ல் முடிக்கப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில், தரைத்தளத்தில் கார் பார்க்கிங் வசதி, முதல் மாடியில் சமையலறை, சாப்பாட்டு அறை, 2-வது மாடியில் திருமண அரங்கு, 3-வது மாடியில் விருந்தினர்கள் தங்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் அறையும் ஏ.சி வசதி உள்ளது. அடுத்துள்ள 3-வது மாடியில்  விருந்தினர்கள் தங்கும் அறை, குளியல் அறையில் சோலார் வாட்டர் ஹீட்டர் வசதி உள்ளது.

இந்த அம்மா திருமண மண்டபத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி 2019 டிச.9-ல் காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் வாடகைக்கு விடப்படாமல் இருந்தது. பின்னர் 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப்பின் அம்மா திருமண மண்டபம் செயல்பாட்டுக்கு வரவில்லை. திமுக அரசு, கொள்கை ரீதியாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என மூடுவிழா கண்டது. அந்த வரிசையில் அம்மா திருமண மண்டபமும் திறக்கப்படாமல் இருந்தது.

திமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபத்தை ஏலம் விட ஏற்பாடுகள் நடந்தது. ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், 2021லிருந்து 2023-ம் ஆண்டு வரை கட்டி முடித்து இதுவரை எந்த விழாக்களும் நடத்தப்படவில்லை. தற்போது மதுரையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.56 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இதன் மூலம் அம்மா திருமண மண்டபமானது, டிஎன்எச்பி (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) ‘அஞ்சலி மஹால்’ பெயர்ப்பலகை வைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுக்கும் நபர்கள் அவர்கள் விரும்பும் பெயரில் வைத்து நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல ஆண்டாக ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது மதுரையைச் சேர்ந்தவர் ஆண்டுக்கு ரூ.56 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x