Published : 18 Aug 2023 03:52 PM
Last Updated : 18 Aug 2023 03:52 PM

நெல்லை - தென்காசி அரசுப் பேருந்துகளில் ‘அடாவடி’ கட்டண வசூல்

திருநெல்வேலி- தென்காசி இடையே இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பாவூர்சத்திரத்துக்கு ரூ.44 கட்டணம் வசூலித்ததற்கான டிக்கெட். (கீழ் படம்) இதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் குறைக்கப்பட்ட கட்டணம் ரூ.42-க்கான டிக்கெட்.

திருநெல்வேலி: திருநெல்வேலி - தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள் தற்போது பழைய வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையில் கடந்த ஒருமாதத்துக்கு மேலாக உயர்த்தி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்காதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திருநெல்வேலி டவுன் - பழையபேட்டை வழித்தடத்தில் தென்காசி செல்லும் பிரதான சாலையில் கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகில் பழுதடைந்த வாய்கால் பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையொட்டி பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இந்த வழித்தடத்தில் தடை விதிக்கப்பட்டு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. ரூ.2 கூடுதலாக வசூல் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு, டவுன், தெற்கு மவுன்ட் சாலை, டிவிஎஸ் கார்னர், கோடீஸ்வரன் நகர், செக்கடி, மதிதா இந்து கல்லூரி, திருப்பணி கரிசல்குளம் விலக்கு, இ.பி. அலுவலகம், பழைய பேட்டை வழியாக இயக்கப்பட்டன.

இதுபோல் தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேட்டை, இ.பி. அலுவலகம், ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம், செக்கடி, கோடீஸ்வரன் நகர், டிவிஎஸ் கார்னர், வழுக்கோடை, தொண்டர் சந்நிதி வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தன.

இவ்வாறு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதால் பேருந்துகளில் கட்டணம் ரூ.2 உயர்த்தப்பட்டு பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. இதற்கு முன் திருநெல்வேலி- தென்காசி இடையே சாதாரண அரசு பேருந்துகளில் கட்டணம் ரூ.51 ஆக இருந்த நிலையில் ரூ.53ஆகவும் ஓன் டூ ஓன் பேருந்துகளில் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும் உயர்த்திவசூலிக்கப்படுகிறது.

இதுபோல் குளிர்சாதன பேருந்துகளில் கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. கட்டண உயர்வு குறித்து பேருந்து நடத்து நர்களிடம் பயணிகள் கேட்டு வாக்குவாதம் செய்தனர். இது குறித்து பயணிகள் புகார் அளித்தும் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் புதிய பாலம் அமைக்கும் கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகே வாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக பாதை உருவாக்கப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

கட்டணத்தை குறைக்கவில்லை ஏற்கெனவே இயக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணநேரம் மிச்சமாகியிருக்கிறது. ஆனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசுப் போக்கு வரத்துக் கழக பேருந்துகளில் குறைக்கவில்லை. அதேநேரத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை குறைத்துவிட்டனர். கட்டணத்தை குறைக்காமல் வசூலிப்பது குறித்து அரசு பேருந்துகளின் நடத்துநர்களிடம் பயணிகள் கேட்கும் போது வாக்குவாதம் செய்கின்றனர். இந்த விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தலையிட்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணி ஆவேசத்தால் பாதையை மாற்றிய நடத்துநர்: தென்காசிக்கு பழைய வழித்தடத்தில் அரசு பேருந்து செல்லும் நிலையில் ரூ.2 கூடுதலாக வசூலிப்பது குறித்து பயணி ஒருவர் நடத்துநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடத்துநர், தனது வீட்டுக்காக வசூலிக்கவில்லை. அதிகாரிகளின் உத்தரவுப்படியே வசூலிப்பதாக பதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தொடரப் போவதாக அப்பயணி கூறியுள்ளார்.

இதையடுத்து ஓட்டுநரிடம் நடத்துநர் சென்று, இதுபற்றி கூறி இதனால் நமக்கு தான் சிக்கல் வரும், எனவே மாற்றப்பட்ட வழித்தடத்திலேயே பேருந்தை இயக்குமாறு தெரிவித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் டிவிஎஸ் கார்னரிலிருந்து வழுக்கு ஓடை வழியாக பழைய பேட்டைக்கு பேருந்தை இயக்குவதற்கு பதில் தெற்கு மவுன்ட் ரோடு, பேட்டை ரொட்டிக்கடை நிறுத்தம், பழயை பேட்டை இபி அலுவலகம் வழியாக மாற்றி இயக்கியுள்ளார். இதனால் கூடுதல் நேரம் பிடித்ததால் பேருந்திலிருந்த பயணிகள் மேலும் சிரமத்துக்கு ஆளானாரர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x