Published : 18 Aug 2023 06:20 AM
Last Updated : 18 Aug 2023 06:20 AM

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: ஆக.28-ம் தேதி விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர். பின்னர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு அவர் ஆக.25 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய சான்று ஆவணங்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இந்த வழக்குகள்தொடர்பான அனைத்து கோப்புகளும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றத்தில் 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவில்லை - அமலாக்கத் துறை குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசு தரப்பு குற்ற அறிக்கையில், ‘‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், அவரது உதவியாளர் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து மோசடியில் ஈடுபட்டதற்கு வலுவான ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்துள்ளது.

வேலைக்காக பெறப்பட்ட தொகை செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கு மற்றும் அவருடைய மனைவி மேகலாவின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவரைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவருக்கு எதிரான ஆதாரங்களைக் காட்டி கேள்விகளை எழுப்பினோம். ஆனால் அவர் அவர் பதிலளிக்க மறுத்து வி்ட்டார். விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. உண்மைகளை மறைக்கும் நோக்கிலேயே செயல்பட்டார்’’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x